ஆசியாவின் ஒரே தலைவராக தன்னை சீனா நினைத்துக்கொள்கிறது! - ஷ்யாம் சரண்





Viber tamil sri lanka viber GIF
ஜிபி

ஷ்யாம் சரண், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர்

மத்திய அரசின் பாதுகாப்பு போர்டு குழு தலைவராக இருந்தவர் ஷ்யாம் சரண். இவர் மத்திய அரசின் கொள்கை வகுப்பு குழுவின் மூத்த உறுப்பினர் ஆவார். இந்திய – சீன எல்லையில் திடீரென ஏற்பட்டுள்ள பதற்றம் எதற்காக என்று பேசினார்.

இந்தியா – சீனா நாடுகளின் எல்லையில் திடீரென சீனா ஆக்ரோஷமாக நடந்துகொள்ள என்ன காரணம்?

லடாக்கிலுள்ள பாங்காங் லேக், சிக்கிம் – திபெத் எல்லைக்கோடு அருகிலுள்ள நகு லா ஆகிய இடங்களில் ஏற்பட்டுள்ள பதற்றம் என்பது புதிதான ஒன்றல்ல. இரு நாடுகளின் எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நாம் முறைப்படி விதிகளின்படி தீர்த்துக்கொள்ள முடியும். லடாக்கின் கால்வான் ஆற்றுப்பகுதியில் இதுவரை நாம் சீனாவின் ஆட்சேபங்கள் இன்றி சென்று வந்திருக்கிறோம். தற்போது அப்பகுதியை தனக்கு உரிமையாக்கிக் கொள்ள சீனா முயல்கிறது. இந்தியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நடந்துகொள்ளும் உலக அரசியலுக்கு சீனாவின் பதிலடியாகவே நாம் புரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் பரவலுக்கு சீனாவே காரணம் என்று அமெரிக்கா கூறியதை இந்தியா ஏற்கிறது. மேலும் தைவான் நாட்டிற்கு உலக சுகாதார நிறுவனத்தில் அங்கீகாரம் வழங்குவது, சீன முதலீடுகளுக்கு கடிவாளம் போட விதிகளை உருவாக்கியது ஆகிய காரணங்களால் சீனா இப்படி ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறது.

இந்தியா இப்பகுதியில் டாலட் பெக் ஓல்டி எனும் சாலைத் திட்டத்தை அமைப்பதும் சீனாவின் கோபத்திற்கு முக்கிய காரணமா?

இந்தியா, சீனா – இந்தியா எல்லைப்பகுதியில் விமானங்கள் மற்றும் தரைப்படைக்கான சாலை வசதிகளை தொடர்ச்சியாக மேம்படுத்தி வருகிறது. போர் நடக்கும்போது படைவீரர்களையும் தளவாடங்களையும் நாம் எளிதாக இங்கு எடுத்துச்செல்ல இந்த சாலை வசதிகள் உதவும். இந்த சாலை அமைக்கும் வசதி ஏற்கெனவே பெரும்பான்மையான பகுதிகள் முழுமையடைந்து விட்டது. எல்லையை மேம்படுத்தும் இந்தியாவின் இப்பணியை சீனா ஆதரிக்கவில்லை.

அண்மையில் நேபாளம் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அந்நாடு வெளியிட்ட வரைபடமும் இந்தியாவுக்கு எதிராகவே இருக்கிறது. இதன் பின்னணியில் சீனா உள்ளதா?

சீனா நேபாளத்திற்கு அமைத்துக்கொடுக்கும் பித்தோராகார் – லிபுலேக் சாலைத்திட்டம் இதற்கு முக்கியக் காரணம். பிரதமர் ஒலி மற்றும் அவருக்கு எதிரான எதிர்க்கட்சி தலைவர் பிரசந்தா, சீனா வெளியுறவுத்துறை கொடுக்கும் அச்சுறுத்தல்கள் அவரின் நிலைப்பாடு மாற்றத்திற்கு முக்கியக் காரணம். சீனா நேபாளத்தில் உள்ள அரசில் பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முனைகிறது. ஒலி, இந்த நேரத்தைப் பயன்படுத்தி தனது நாட்டில் தேசியவாதியாக தன்னைக் காட்டிக்கொள்கிறார். இந்தியாவை கடுமையாக விமர்சித்து மோசமான வார்த்தைகளில் பேசினாலும் அவரை சீனா காப்பாற்றும் என நம்புகிறார். அதனால்தான் அவரது அறிக்கை இந்தியாவை கடுமையாக விமர்சிக்கும்படி இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வரைபடங்களில் உள்ள எல்லைப்பகுதியை யாருக்கு சொந்தம் என்று சொல்லும் பிரச்னைகள் தொடங்கிவிட்டன. இந்தியா அண்மையில் நேபாளம் தனது உரிமை என்று கூறிய பகுதிகளை இந்தியா உடனே மறுத்து கூறியுள்ளது. நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லைப் பிரச்னைகள் 98 சதவீதம் தீர்க்கப்பட்டுள்ளன.

கோவிட் -19 தொடர்பான விசாரணை நடைபெறும் நிலையில் சீனா ஏன் திடீரென ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறது?

சீனா, ராணுவ பலத்தையும் பொருளாதார பலத்தையும் அதிகரித்துக்கொள்ளும் முயற்சிகளையும் தொடர்ச்சியாக செய்து வருகிறது. ஆசியாவில் தன்னிகரற்ற தலைமை கொண்ட இடமாக தன்னைக் காட்டிக்கொள்ள அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. கோவிட் -19 சூழ்நிலையைப் பயன்படுத்தி உலக அரசியலிலும் தன்னை முன்னிலைப்படுத்த சீனா துடிக்கிறது. உலக சுகாதா மையத்தில் சீனாவுக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காதது அந்நாட்டிற்கு தீவிரமான கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நன்றி: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஆங்கிலத்தில்: ஹிமான்ஷி தவான்.


கருத்துகள்