சுயசார்பு இந்தியா என்பது பிற நாடுகளை எதிர்ப்பதற்கானது அல்ல!










Anything made in India, including by MNCs, is local for us: BJP | GG2




ரவிசங்கர் பிரசாத்

சட்டத்துறை அமைச்சர்

இந்தியா, எலக்ட்ரானிக்ஸ் துறையில் வளர்ச்சி பெற என்ன வசதிகளை அரசு செய்துள்ளது?

அரசு, 50 ஆயிரம் கோடி ரூபாயை மானியமாக அளித்துள்ளது. இதில் 40 ஆயிரம் கோடி ரூபாய் மானியம், தொழில் உற்பத்தி சார்ந்தது. மீதியுள்ள தொகை, ஒருங்கிணைந்த உற்பத்திக்காக வழங்கப்படுகிறது. இன்று முக்கியமான ஐந்து நிறுவனங்கள் ஸ்மார்ட்போன் சந்தையில் 80 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன. இந்த நிறுவனங்களை நாம் இந்தியாவில் தொழில் உற்பத்தியை தொடங்க வருமாறு ஈர்க்கவேண்டும். மாப்பிள்ளை, பெண் மட்டுமல்லாது ஒட்டுமொத்த திருமண கூட்டமே இங்கு நடைபெறவேண்டும் என்று கருதிக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன்கள், அவற்றுக்கான உதிரிபாகங்கள், சிப்கள் என அனைத்துமே இந்தியாவில் தயாரிக்கப்பட வேண்டும். அந்நிறுவனங்கள் அப்படி தயாரிக்க முன்வந்தால் அவற்றுக்கு அரசு மானியங்களை வழங்கும். இந்த நிறுவனங்கள் உலகளவில் உள்ள பிற நிறுவனங்களுக்கு போட்டியாக விளங்கவேண்டும். நாங்கள் இப்படித்தான் எண்ணி செயல்பட்டு வருகிறோம்.

நீங்கள் நிறுவனங்களை தொடங்குவது பற்றி பேசினாலும் தொழிற்சாலைகளுக்கான நிலங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் அல்லவா இருக்கின்றன?

நாங்களும் அதுபற்றி யோசித்து மாநிலங்களோடு பேசி வருகிறோம். எலக்ட்ரானிக்ஸ் துறை என்பது சூழலை மாசுபடுத்தாத துறை. எனவே இவற்றை நிலம் பெற்று அமைப்பது பெரிய சவாலாக இருக்காது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம். மத்திய அரசு இத்திட்டத்திற்காக 32, 754 கோடி ரூபாயை வழங்கவிருக்கிறது.

இன்றுவரை நாம் முக்கியமான எலக்ட்ரானிக் பாகங்களை இறக்குமதிதான் செய்துவருகிறோம். எப்படி நீங்கள் திடீரென சுயசார்பு இந்தியா திட்டத்தை செயல்படுத்த முடியும் என நம்புகிறீர்கள்?

இந்தியாவில் பொருட்களை அசெம்பிளிங் செய்வது, தயாரிப்பது என்பது பல்வேறு நிலைகளில் பணி நடைபெறுகிறது. நமது நாட்டின் பலம் மனிதவளமும், மதிப்பு வாய்ந்த சந்தையும்தான். சீனாவைப் போலவே நாமும் பல்வேறு சிப்கள், சார்ஜர்களை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்தியா 1.21 பில்லியன் மொபைல்களை தயாரிக்கிறது. இதில் 200 மில்லியன் போன்கள் ஸ்மார்ட்போன்களாக உள்ளன. இன்று இந்தியாவில் இணையத்தை அணுகுபவர்களில் 85 சதவீதம் பேர் ஸ்மார்ட்போன் வழியாகவே அணுகுகின்றனர்.

சீனா, உற்பத்தி மட்டுமல்லாது விநியோகம் சார்ந்தும் சிறப்பாக செயல்பட்ட நாடு. இதுபோல இந்தியா செயல்பட்டு சுயசார்பாக மாறும் என்று நம்புகிறீர்களா?

சுயசார்பு இந்தியா என்பது எந்த நாட்டுக்கும் எதிர்ப்பதமாக கூறப்படவில்லை. நாம் நாட்டில் உற்பத்தி அதிகரிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கம். இந்தியா உலக வணிகத்திலிருந்து தனிமைப்படுத்தப்படுவது என்று பொருள் கொள்ளாதீர்கள். நம் நாட்டில் உற்பத்தி அதிகரித்து வேலைவாய்ப்புகள் பெருகவேண்டும் என்பதே அரசின் லட்சியம். இதன்மூலம் எளிதாக வணிகம் செய்யமுடியும் பட்டியலிலும் இந்தியா முன்னேறும்.

இந்தியாவில் நிலம், செயல்பாடு ஆகியவற்றில் தொழில்துறையினர் பல்வேறு இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இவற்றை நீங்கள் எப்படி தீர்க்கப்போகிறீர்கள்?

வணிகம் தொடர்பான பிரச்னைகள் எழுந்தால் எங்கள் அமைச்சகத்திற்கு நீங்கள் ஒரு அழைப்பு விடுத்தால் போதும். அதனை உடனடியாக தீர்க்க தயாராக இருக்கிறோம். 250 மொபைல் போன் தொழிற்சாலைகளை அமைத்து அதனை சிறப்பாக மேம்படுத்துவதே எங்கள் நோக்கம். இதன் மூலம் 20 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாடுடே

 

 


கருத்துகள்