சிஎஸ்ஆர்: தன்னார்வ பங்களிப்பும், லாபமும்!



Corporate Social Responsibility (CSR) | Air India Express


7

நிறுவனங்களின் பங்களிப்பு

தேர்தல், தண்ணீர் தட்டுப்பாடு, உறுப்பு தானம், சாலை விபத்து ஆகிய விஷயங்களுக்கு பெருநிறுவனங்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து நடத்துகின்றன. இதற்கு பெரும்பாலான நிதியை குறிப்பிட்ட நிறுவனம்தான் செலவிடும். இம்முறையில் டைம்ஸ் ஆஃப் இந்தியா, தி இந்து, இ்ந்துஸ்தான் டைம்ஸ் போன்ற தேசிய நாளிதழ்கள் தண்ணீர் தட்டுப்பாடு, வாக்குரிமை, பழமையான நகரங்கள் பற்றிய செய்திக்கட்டுரைகளை தொடர்ச்சியாக வெளியிடுகின்றன. மேற்சொன்ன துறைகளில் வல்லுநர்களை, ஆய்வாளர்களை கூட்டி வந்து பொதுநலனுக்கான பல்வேறு ஆய்வு கூட்டங்களையும் நடத்துகின்றன.

நாளிதழ்களின் அடிப்படையான பணி, அறிவை மக்களுக்கு புகட்டுவதுதான். அதோடு தன்னை மக்களில் ஒருவராக கருதும் பத்திரிகைகள்தான் மக்களுக்கான பங்கேற்பு பகுதிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டு வருகின்றன. இதில் தேசிய நாளிதழ்கள் குறிப்பிட்ட சமூக பிரச்னை சார்ந்து அத்துறையில் செயல்படும் முன்னணி தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் இந்த பாணியை பின்பற்றுவதோடு தாங்கள் சார்ந்த துறையை ஒட்டியே சமூக பிரச்னைகளை தேர்வு செய்யலாம். அது சமூகப் பொறுப்புணர்வு திட்டங்களை விரிவான அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு உதவும். துரித உணவுகள் உடலின் கொழுப்பை அதிகரித்து இதயத்தை பலவீனப்படுத்துகிறது என்று சர்ச்சை எழுந்தது. இதனால் சப்வே நிறுவனம், அமெரிக்க இதயநல சங்கத்தோடு இணைந்து ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் பற்றிய விழிப்புணர்வை செய்தது. இதுபற்றி வானொலி மற்றும் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து நல்லபெயரை பெற்றது. பர்கர், சாண்ட்விட்ச்சுகளை சீனியர் சிட்டிசன்களா சாப்பிடுவார்கள்?

இளைஞர்கள்தான் சப்வே, மெக்டொனால்ட், கேஎஃப்சி போன்ற துரித உணவகங்களின் டார்க்கெட். அவர்களுக்குத்தான் தவறான உணவுப்பழக்கம் காரணமாக இளம் வயதிலே மாரடைப்பு வருகிறது. சப்வே, இந்த விஷயத்தை வைத்தே தன் நோக்கத்தில் வெற்றி கண்டது. இதைப்போலவே பெஸ்ட் பை நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்களை மறுசுழற்சி செய்யவும், பாம்பர்ஸ் நிறுவனம் குழந்தைகளுக்கான தொற்றுநோய் பற்றியும், மஸ்டாங் நிறுவனம் கடற்கரையில் குழந்தைகள் அணிய வேண்டிய ஆபத்துதவி உடைகள் பற்றியும், ப்ரீமெரா ப்ளூ கிராஸ் நிறுவனம் ஆன்டிபயாடிக் மருந்துகளுக்கு எதிராகவும் பிரசாரத்தை செய்து வெற்றி கண்டன..

தற்போது கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் பரவி வருகிறது ஆனால் நம்மிடம் இதனை சோதிப்பதற்கு தேவையான டெஸ்ட் கிட் இல்லை. அதனை புகழ்பெற்ற அபோட் நிறுவனம் தயாரித்திருப்பதாக செய்தி வருகிறது. அதனை பிரபல நடிகர் வாங்கித் தருகிறார் என்றால் அது தன்னார்வ நிதி வகையில் சேரும். தரும் பணத்தை அவர் தன் சமூக அறக்கட்டளை சார்பில் வழங்குகிறார் எனக் கொள்வோம். இது கார்ப்பரேட் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதி வகையில் சேரும். இம்முறையில் சூழலியலுக்கு ஆங்கிலப்பட நடிகர் லியனார்டோ டிகாப்ரியோ பல்வேறு முறை நிதியுதவிகளை வழங்கியுள்ளார். நேரடியான பண உதவியாக இதனை கருதலாம்.

கொரோனாவுக்கு தமிழ்ப்பட நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.25 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதியாக வழங்குகிறார் என்றால் அது நேரடியான நிதி உதவி. இதுவே நடிகர் சூர்யா, கல்வி கற்கும் மாணவர்களுக்கு பல்லாண்டுகளாக கல்வி உதவித்தொகையாக வழங்கி வருகிறார். இந்த உதவிகளை பொருளாகவும் நிறுவனங்கள் வழங்கலாம். அல்லது குறிப்பிட்ட சேவைகளை அவர்கள் பெறுவதற்கான அனுமதிச்சீட்டுகளை வாங்கியும் தரலாம்.

இம்முறையில் கான் அக்ரா புட்ஸ் நிறுவனம் நாடெங்கும் செயல்பட்டு வந்த குழந்தைகளுக்கான உணவு வங்கிகளுக்கு நிதியளித்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், நெடுஞ்சாலை வாகனங்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கியது. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம், தேசிய பூங்கா ஒன்றுக்கு கண் கூசாத கண்ணாடிகளை அமைத்துக்கொடுத்தது.

பொதுவாக இதுபோன்ற பணிகளை செய்யும் நிறுவனங்கள் மக்களிடையே தம் நிறுவனங்களை வலுப்படுத்தவும், தங்களைப் பற்றிய கருத்தை மீண்டும் வலுவாக வாடிக்கையாளர்களின் மனத்தில் பதிய வைக்கவுமே செய்கிறார்கள். உதாரணமாக மைக்ரோசாப்டை எடுத்துக்கொள்வோம்.

இதன் நிறுவனர்களில் ஒருவரான பில்கேட்ஸூம் அவர் மனைவியும் தொடங்கிய அறக்கட்டளை கேட்ஸ் பவுண்டேஷன். இந்நிறுவனம் இந்தியாவில் தடுப்பூசி போடுவதற்கான பிரசாரத்தை செய்துவருகிறது. பில்கேட்ஸ் மருந்து நிறுவனங்களில் பங்குதாரராக உள்ளார். அதனால் தடுப்பூசி மரணங்களைப் பற்றி கவலைப்படாமல் அதனைப் பற்றி பிரசாரம் செய்கிறார் என்று சர்சைகள் எழுந்தன. ஆனாலும் கூட கேட்ஸ் பவுண்டேஷன் இந்திய அரசுடன் சேர்ந்து பல்வேறு அரசு திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. அறக்கட்டளை என்றாலும் இப்பெயரைச் சொல்லும்போதெல்லாம் மைக்ரோசாப்ட்டை பலரும் நினைப்பார்கள். இதுதான் மைக்ரோசாப்டின் மாபெரும் வெற்றி. இந்நிறுவனம் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுக்க பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறது. தற்போது மைக்ரோசாப்ட்டின் இயக்குநர் சத்யா நாதெள்ளா காலத்திலும் பல்வேறு கல்வி சார்ந்த தொழில்நுட்ப உதவிகளை ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு செய்து வருகிறது.

சமூகப் பிரச்னைகளை அத்தனையிலும் பெருநிறுவனங்கள் பங்கேற்க வேண்டியதில்லை. அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வுகளை நான்தான் கூறுவேன் என்று நிறுவனங்கள் முன்னே சென்று நிற்கவேண்டியதில்லை. தமிழகத்தைச் சேர்ந்த அகரம் பவுண்டேஷன் மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்னைகளுக்கு முன்னே நிற்கும் நிறுவனம். அது கல்வி சார்ந்த இடர்ப்பாடுகளை மட்டும் நீக்கி மாணவர்கள் வாழ்க்கையில் துணிச்சலோடு நிற்க வழிகாட்டுகிறது. அதைப்போல நிறுவனம் தொடங்கப்பட்ட நோக்கம் சார்ந்த பிரச்னைகளுக்கு உதவுவது நல்லது

உதவிகளை வழங்குவது ஒருநாளோடு நின்றுவிடக்கூடாது. அதனை மனதில் கொண்டு அதற்கேற்ப திட்டமிடுவது அவசியம். அப்போதுதான் நிறுவனம் நீண்ட நாட்களுக்கு சந்தையில் தாக்குப்பிடிக்க முடியும்.