சமூகத்தின் முகம் - சமூகப் பொறுப்புணர்வுத் திட்டம்


Mentor, Mentoring, Help, Hand, Give A Hand, Rescue
pixabay



3

சமூகத்தின் முகமாக நிறுவனம்

ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் விழாவில் முகம் காட்டிவிட்டு நழுவி விடும் நிறுவனங்கள் உலகமெங்கும கிளை விரிக்கவே முடியாது. எத்துறை சார்ந்த நிறுவனமாக இருந்தாலும் மக்களோடு அடிக்கடி இணைந்து ஏதாவது ஓர் விழிப்புணர்வு சார்ந்த விஷயங்களை பேசியபடி இருக்கவேண்டும். இதற்கு சிறந்த உதாரணம் டைம்ஸ் ஆஃப் இந்தியாவை சொல்லலாம். இந்த பத்திரிகை சென்னை பதிப்பில் சென்னை நகரம் பற்றிய பிரபலங்களின் எண்ணங்களை சென்னை சான்ஸே இல்லை என தலைப்பிட்டு பிரசுரிக்கிறது. அதோடு தேர்தல் சமயங்களில் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கி பலரையும் வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தூண்டியது. தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது வாட்டர் பாசிட்டிவ் என்ற தலைப்பில் பல்வேறு செய்திகளை வெளியிட்டதோடு, இதற்கான நிகழ்ச்சி ஒன்றில் மக்களும் பங்கேற்கும்படி செய்து அவர்களின் கேள்விகளுக்கு பதில்களைப் பெற்று தந்தது.

நமக்கெதுக்கு இதெல்லாம்... நாம் செய்திப்பத்திரிகைதானே என தந்தி, தினகரன் போல ஒதுங்கி நின்று விளையாட்டை விளையாடும் பத்திரிகைகளை மக்கள் நினைவில் வைத்திருப்பது கடினம். 1992ஆம் ஆண்டு மெக்டோனால்டு நிறுவனம் அமைந்திருந்த லாஸ்வேகாசின் தெற்கு மத்திய பகுதிகளில் கலவரம் மூண்டது. ஆனால் கலவரக்காரர்கள் கடைகளை சேதப்படுத்துவதை கடை ஊழியர்களே முன்நின்று தடுத்தனர். காரணம், நிறுவனம் அவர்களை ஆதரித்து அங்கீகரித்து பல்வேறு வசதிகளை செய்துகொடுத்ததே காரணம். அங்குள்ள மக்கள் இனக்குழுவோடும் மெக்டொனால்டு வலுவான உறவை ஏற்படுத்தி வைத்திருந்தது. அக்கலவரத்தில் மெக்டொனால்டின் சில கடைகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டன.

உலக வளக்கழகம் நாடு முழுவதும் இரண்டு தேசிய ஆய்வுகளை நடத்தியது. இதில் குறைந்த சம்பளம் என்றாலும், சமூக பிரச்னைகளில் பங்களிப்பு செய்யும் மக்களுக்கு அறிமுகமான நிறுவனங்கள் பணி செய்வதை பணியாளர்கள் விரும்புவது தெரிய வந்துள்ளது. இந்த முறையில்தான் ஏடி அண்ட் டி நிறுவனம் தனது பவுண்டேஷன் மூலம் ஏராளமான தொகையை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக வழங்கிவருகிறது. நியூயார்க் டைம்ஸ் இதழ் தனது பவுண்டேஷன் மூலம் சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகயாளர்களுக்கு பல்வேறு பயிற்சிகளையும் உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறது.

சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பல்வேறு நிறுவனங்கள் தங்களின் அலுவலக நேரத்திலேயே செய்கின்றன. சில நிறுவனங்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இதனைச் செய்கின்றன. பொதுவாக நிறுவனங்கள் சமூக பொறுப்புணர்வு பணிகளில் தங்களுடைய ஊழியர்கள் இணைந்திருப்பதை விரும்புகின்றன. அமெரிக்காவைச் சேர்ந்த டிம்பர்லேண்ட் நிறுவனம், தனது முழுநேர, பகுதிநேர ஊழியர்களுக்கான சமூக பொறுப்புணர்வு பணிகளை வரையறை செய்து வழங்குகிறது. முழுநேர ஊழியர்கள் 40 மணி நேரங்களும், பகுதிநேர ஊழியர்கள் 16 மணி நேரங்களும் ஆண்டுக்ககு பணியாற்றுமாறு திட்டங்களை வகுத்து வருகிறது.

செலவு குறையும்

முதலில் சமூக பொறுப்புணர்வு திட்டங்களை தொடங்கும்போது நிறுவனம் தனது பட்ஜெட்டில் குறிப்பிட்ட நிதியை ஒதுக்கவேண்டி இருக்கலாம். ஆனால் திட்டங்களின் வெற்றி, செயல்பாடு ஊடகங்களில் வெளித்தெரிய தொடங்கும்போது, பல்வேறு திட்டங்களுக்கான உதவி நிறையவே கிடைக்கும். மேலும் பல்வேறு சமூக பொறுப்புணர்வு திட்டங்களில் வழியாக கிடைக்கும் கண்டுபிடிப்புகள், ஐடியாக்கள் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க உதவும். சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் நிறுவனத்திற்கு விளம்பர பட்ஜெட்டை பெருமளவு குறைக்கிறது.

இப்போது சில பிராண்டுகளை நினைத்துப் பாருங்கள். டெட்டால் என்றாலே உங்களுக்கு கைகழுவும் லிக்யூட், சோப்பு நினைவுக்கும் வரும். ஹமாம் என்றாலே சரும பாதுகாப்பு, கோல்கேட், பெப்சோடென்ட் என்றாலே பற்கள் சொத்தை என்பது நினைவுக்கு வரும். சிலர் சமூகம் சார்ந்த செயல்பாடு காரணமாகவே பொருட்களை எளிதாக விற்று வருகின்றனர். டெக்கன் கிரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா ஆகிய பத்திரிகைகளிஃல அமுலின் கார்ட்டூன் பார்த்திருப்பீர்கள். அமுலின் விளம்பரத்தூதர் அந்த சிறுமிதான். ஆனால் அவர்கள் என்ன விற்கிறார்கள் என்று உங்களுக்கு புரிவதோடு அன்றாட நடப்பு விஷயங்களையும் குறும்பாக படத்தில் சொல்லியிருப்பார்கள். இதுதான் புத்திசாலித்தனம் என்பது.

வியாபாரத்தோடு சமூக பொறுப்புள்ள நிறுவனம் என்றாலே மக்கள் அதன் மீது நம்பிக்கை கொள்வார்கள். நிறுவனத்தின் அடுத்தடுத்த லட்சியங்களுக்கான முதலீடும் இப்படிக் கிடைக்க வாய்புள்ளது. ஒரு நிறுவனத்தில் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை அதன் சமூக திட்டங்களின் வழியாகவும் தெரிந்துகொள்ள முடியும்.

தொடரும்...