கோழிக்கறியை எப்படி சாப்பிடுவது? - கடிதங்கள் - கதிரவன்

 



















7.3.2022

மயிலாப்பூர்



அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். 

நலமா?

நான் இன்று அலுவலக வேலையாக ஐஐடி ரிசர்ச் பார்க்கிற்கு சென்றேன். அங்குள்ளவர்கள், நிறுவனங்கள் என அனைத்துமே தனி உலகம் போல தோன்றியது. லெஜண்ட் ஓவியர் சொன்னது உண்மைதான். சாப்பிடும்போது யாரும் கைகழுவவில்லை. எல்லாமே ஸ்பூன், ஸ்போர்க் தான். 2047ஆம் ஆண்டு இந்தியா பற்றிய ஐடியாக்களை சொல்லுகிறார்கள். போய் அதைப்பற்றி கருத்துகளை எழுதிக்கொண்டு வாருங்கள் என நாளிதழ் ஆசிரியர் அனுப்பினார். அதாவது கருத்தரங்கு நடக்கும் காலையில் பத்து மணிக்கு தகவல் சொன்னார். எனவே, அலுவலக சகா காந்திராமனையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.  பேச்சாளர்கள் பிரமாதமாக கருத்துகளை பேசினார்கள். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அபாரம். 

எங்களைத் தவிர மற்றவர்கள் உணவுக்கூடத்தில் ஸ்பூனையே பயன்படுத்தினர். கனமான பீங்கான் தட்டு. அதைப்பிடிக்க இரண்டு கவளம் சோறு சேர்த்து சாப்பிடவேண்டும். அதில் ஸ்பூனை வைத்து சாப்பிட முயன்றால், சோறு நழுவிக்கொண்டே இருந்தது. என்னடா இது ஈரோட்டுக்காரனுக்கு வந்த சோதனை என்று பார்த்தால், கோழிக்கறியை தட்டில் போட்டு என் பிடறிக்கு பின்னாடியே ஒருவர் நின்று கறுக் மொறுக் கென சாப்பிட்டு வந்தார். விரல்களைப் பயன்படுத்தித்தான். பிறகுதான் கைகளால் சாப்பிட நம்பிக்கை வந்தது. 

கையைத் துடைத்துக்கொள்ள பீங்கானையொத்த கனமான டவல் ஒன்றைக் கொடுக்கிறார்கள். அதையே மக்கள் நிறையப் பேர் பயன்படுத்தினர். பஃபே வகையில் உணவு சாப்பிடவேண்டியதுதான். குலோப்ஜாமூன், கேக் என இனிப்பு வகைகள் தனியாக பரிமாறப்பட்டன. எழுதுவது ரெகுலர் நாளிதழ் பதிப்புக்குத்தான். எனக்கு நேரடியாக ஒரு இடத்திற்குப் போய் வந்து எழுதுவது புதிய அனுபவமாக உள்ளது. 

எதிர்வரும் 9ஆம் தேதியும் போக வேண்டியுள்ளது.  போய் வந்தது பற்றிய பாதிகட்டுரையை இன்றே எழுதி வைத்துவிட்டேன்.  மீதியை எதிர்வரும் திங்கள் பதிப்பிக்கலாம். 40ஆவது புத்தகத் திருவிழாவில் வாங்கிய நூல்களை இப்போதுதான் மெல்ல படித்து வருகிறேன். கல்யாணி என்ற நாவலை நேற்று படித்தேன். தேவன் என்ற விகடனில் பணியாற்றிய எழுத்தாளர் எழுதிய நகைச்சுவைக் கதை. வசனங்களும், பாத்திரங்களும் வசீகரமாக உள்ளன. நரசிம்மன், சந்துரு ஆகிய பாத்திரங்கள் நாவலில் மறக்க முடியாதவை. 

நன்றி!

அன்பரசு 

Pinterest



கருத்துகள்