ஆழமான துயர் நிறைந்த ஷிபுவின் வாழ்க்கை! - கடிதங்கள் - கதிரவன்

 











26.1.2022

மயிலாப்பூர்

அன்பு நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

உங்கள் உடல், மனம் மேம்பட இறைவனை வேண்டுகிறேன். மறைமலை அடிகள்  எழுதிய கடிதங்களைத் தரவிறக்கி வாசித்தேன். தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தேர்ந்து விளங்கிய ஆளுமை. தனித்தமிழில் எழுதுவது, சைவத்தை பரப்புவது என வாழ்ந்து வந்திருக்கிறார். தமிழக அரசு  மின் நூலகத்தில் நிறைய அரிய நூல்கள் கிடைக்கின்றன. இந்த நூலை அங்கிருந்தே தரவிறக்கி வாசித்தேன். 

இன்று சன் மோகன்ராஜ் அண்ணா அறைக்குச் சென்றேன். அவர் தனது மனைவி, குழந்தை ஆகியோரை சென்னைக்கு கூட்டி வர உபாயம் யோசித்து வந்தார். வருமான வாய்ப்பை தேடிக்கொண்டிருக்கிறார். மின்னல் முரளி மலையாளப் படம் பார்த்தேன். கிராமத்து சூப்பர் ஹீரோ கதை. நன்றாக திட்டமிட்டு எடுத்திருக்கிறார்கள். படத்தில் நம்மை யோசிக்க வைக்கும் எதிர்மறை நாயகன் பாத்திரம் ஷிபு தான். அதாவது, நாடக கலைஞரான குரு சோமசுந்தரம். 

அம்மா, காதலி என இரண்டையும் சுற்றியுள்ளவர்கள் இழக்கிறார். வாழ்வதற்கான பொருளை அவர் இழக்கும்போது கடுமையாக கோபமுறுகிறார். அதில் ஏதும் தவறிருப்பதாகத் தோன்றவில்லை. நாயகனான ஜெய்சன் என்பவரின் வாழ்க்கை பெரிதாக ஈர்க்கவில்லை. ஷிபுவின் வாழ்க்கை ஆழமான துயரைக் கொண்டது. தன் வாழ்க்கையில் சிறு மகிழ்ச்சியை அவர் பெறும்போது அதுவும் சுற்றியுள்ளவர்களால் அழிகிறது. பழிவாங்கலை முடித்துவிட்டு கிளம்பும்போது அவர் வாழ நினைத்த வாழ்க்கை அவரது வீட்டுக்கே வருகிறது. அந்த நேர பரவசத்தில் எதுவும் பேச முடியாமல் கண்ணீர் பெருக நிற்கும் காட்சி, காதலியிடம் பேசுவது படத்தில் எனக்கு பிடித்திருந்தது. 

ஷோபாடே நூலை திரும்ப படிக்கத் தொடங்கியிருக்கிறேன். படித்து முடிக்கவேண்டும். நாளை எப்போதும் போல அலுவலகம் செல்லவேண்டும். வேலையும் எப்போதும் போல சுவாசம் போல தடையின்றி தொடரும். 

நன்றி!

அன்பரசு


கருத்துகள்