மனிதனை மாற்றுவது கலையா,கலைஞனா? - கடிதங்கள்- கதிரவன்

 










22.1.2021

மயிலாப்பூர்






அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? வீட்டில் உள்ளோரை கேட்டதாக சொல்லவும். எங்கள் நாளிதழை டிஜிட்டலாக ஐந்து பக்கங்களில் உருவாக்கி பள்ளிகளுக்கு அனுப்புகிறேன் என்று எடிட்டர் சொன்னார். அதாவது, தினசரி எங்களுக்கு வேலை உண்டு. 

இன்று மருத்துவர் ஜீவா பசுமை விருது பெற்ற சமஸ், டி.எம்.கிருஷ்ணா ஆகியோரது வீடியோ பார்த்தேன். ஊக்கமூட்டும்படி இருந்தது. சமஸ் செயலூக்கம் பற்றியும், ஜீவா ஏற்படுத்திய தாக்கம் பற்றியும் பேசினார். வாய்ப்பாட்டு கலைஞர் கிருஷ்ணா தனது செயல்பாடு, நம்பிக்கை பற்றி உறுதியாக பேசினார். கலை எப்படி மனிதனை மாற்றுகிறது, அதை கலைஞன் எப்படி சாத்தியப்படுத்துகிறான் என்பதை பேசியது அருமை. இன்றைய நாள் இனிதானது இவர்களால்தான். காலையில் கவிதா அக்கா பேசினார். தற்போது ஓமனில் வாழ்கிறார். எப்போதும் உற்சாகமாக இருக்கும் நபர்களில் ஒருவர். தனக்குப் பிடித்த நூல்கள், வாசிப்பு என சிறிது நேரம் பேசினோம். விரைவில் ஈரோட்டுக்கு வருகிறேன் என்றார். இவர் எனக்கு நண்பரல்ல. அண்ணனின் தோழி. 

தி ஆர்க் மிஷன் அமைப்பை நடத்தும் ஆட்டோ ராஜா என்பவரைப் பற்றி படித்தேன். 750க்கும் மேற்பட்ட ஆதரவற்றோரை கொடும்பிணி கொண்டோரை பராமரித்து வருகிறார். இத்தனைக்கும் இளமையில் பிக் பாக்கெட்டாக இருந்தவர். கடந்த பத்து ஆண்டுகளாக வாழ்க்கை வேறு திசையில் போகிறது. எந்த இடத்தில் மனம் மாறுகிறது என யாரும் சொல்லமுடியாது. நன்றி!

அன்பரசு  


கருத்துகள்