சுலைமானி டீயை அறிமுகம் செய்த அருமை நண்பர் சக்திவேல்! கடிதங்கள்- கதிரவன்

 










25.1.2022

மயிலாப்பூர்

அன்பிற்கினிய நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? 

நோய்த்தொற்று ஓரளவுக்கு இங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. ஞாயிறு லாக்டௌன் விலக்கப்பட்டு விடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அப்படி நடந்தால் நல்லதுதான். நாங்கள் தினசரி செய்திகளை அடிப்படையாக கொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறோம். ஃபாரின் ரிடர்ன் முதலாளிக்கு பிடித்தால் வேலை இப்படியே தொடரும். இல்லையா மீண்டும் கோட்டை அடித்து திரும்ப போடவேண்டியதுதான். 

கதிரவன், முன்னர் நீங்கள் அனுப்பி வைத்த கடிதங்களை தொகுத்து தனி நூலாக்கிவிட்டேன். வெகுநாட்களாக தேங்கி கிடந்த வேலை அது. நூலை முடித்து மின் நூலாக அமேஸானில் பதிவேற்றம் செய்துவிட்டேன். இதுவரை அமேஸானில் பத்து மின்னூல்களை எழுதி பதிவிட்டுள்ளேன். 

குறிப்பிட்ட நேரத்தில் விஷயங்களை சேகரித்து எழுத முடியுமா என்று சோதித்த சோதனையின் விளைவுகள் இவை. வணிக ரீதியாக இந்த மின்நூல்களால் பெரிய பயன் ஏதுமில்லை. இந்த நூல்களை எழுதி முடிக்கும்போது தன்னிறைவு கிடைக்கிறது. அதுதான் இப்போதைக்கு ஊக்கம். பணம் பிறகுதான். அதுவும் கிடைத்தால்தான். ரீடர்ஸ் டைஜெஸ்ட் இதழில் மனிதநேய உதவிகளை வழங்கிய மனிதர்களைப் பற்றி எழுதியிருந்தார்கள். அற்புதமான பதிவு. மருத்துவம், சமூகம், சட்டம் என பல்வேறு பிரிவிகளைச் சார்ந்து இயங்குபவர்கள். தன்னைக்கரைத்து, தீக்குச்சியாக எரித்துக்கொள்பவர்கள்தான் இங்கு அதிகமாக இருக்கிறார்கள். 

அன்பரசு 







30.1.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?

ஞாயிறு பொதுமுடக்கம் இல்லை. எனவே, சன் மோகன் அண்ணா அறைக்குச் செல்ல நினைத்தேன். அவர், ஓடிடி ஒன்றுக்கு தனது படத்தை இயக்கும் வேலையில் வேகத்தில் இருந்தார். எனவே, நான் சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன். காலையில் நானும் அவரும் சேர்ந்து ஒன்றாக சாப்பிடுவது வழக்கம். ஒருவேளை உணவு, ஒரு படம் என்பதுதான் இயல்பாக அமைந்த பழக்கம். 

நந்தமூரி பாலகிருஷ்ணாவின் அகண்டா படம் பார்த்தோம். ஒவ்வொரு காட்சிக்கும் சக்தி சார் என்னைப் பார்த்து கேலிப்புன்னகை செய்துகொண்டே இருந்தார். அது மட்டுமே சங்கடம். மற்றபடி படத்தில் எனக்கு எந்த பிரச்னையும் இல்லை. பார்ப்பவர்களை சந்தோஷப்படுத்த வேண்டும். விருப்பங்களை நிறைவேற்றவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் போயபட்டி சீனு படம் எடுத்திருந்தார். வாழ்க்கையைத் தாண்டிய புனைவுப்படம். தியேட்டரில் விசில் அடித்து பார்க்கவேண்டிய படம். அதற்காகவே படத்தை எடுத்திருக்கிறார்கள். ஓடிடியில் பார்த்தாலும் கூட டிவியின் பிரேமிற்குள் காட்சிகள் அடங்கவில்லை. 

கனிமச்சுரங்கத்தில் கிடைக்கும் கதிர்வீச்சு கனிமம் மக்களை எப்படி பாதிக்கிறது, அதை தடுக்க நாயகன் எடுக்கும் முயற்சி அவரது குடும்ப நிம்மதியை எப்படி அழிக்கிறது என்பதே படம்.  இரண்டு நாயகர்கள். ஒருவர் லௌகீக நாயகன், இன்னொருவர் தனக்கான தர்மத்தின்படி நடக்கும் சந்நியாசி.  நாளை எனக்கு அலுவலக வேலைகள் தொடங்குகின்றன. 

புராணங்களை மீள்புனைவு செய்து எழுதுவது எனக்கு படிக்க பிடித்திருக்கிறது. இப்போது இந்திய எழுத்தாளர்கள் இப்போது மீள்புனைவு என்ற வகையில் நூல்களை எழுதி வருகிறார்கள். அமீஷ் எழுதிய ராவணன் பற்றிய நாவலை வாசித்துள்ளேன். இப்போது ராமன் பற்றிய நாவலை பீடிஎப்பாக போனில் படித்து வருகிறேன். 

உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள். தேர்தல் நேரம். வீட்டில் பெற்றோரைக் கேட்டதாகச் சொல்லுங்கள். நன்றி! 

அன்பரசு








31.1.2022

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். தேர்தல் வேலைகளில் பரபரவென இருப்பீர்கள். உடல்நலனை பார்த்துக்கொள்ளுங்கள். நாளை முதல் அலுவலகத்தில் எப்போதும் போல உதவி ஆசிரியர்கள் பணிக்கு வந்துவிடுவார்கள். இனி சண்டைகளும், கூச்சலும், களேபரங்களும் தொடங்கும். இன்றே சீஃப் டிசைனர் முகத்தில் ஏதோ பீதி தெரிந்தது. முடிந்தளவு பொருட்களை அரசு சிறப்பங்காடியில் வாங்க முடிவு செய்துள்ளேன். 

கொஞ்சம் சிறிய அளவுகளில் பொருட்களை வாங்க முடிகிறது. விலையும் சற்று குறைவு. என்ன தூக்கம் கலைந்து எழுந்தால்தானே கடை முழுக்க கிடக்கும் பெட்டிகளை அடுக்கி வைக்க முடியும். 

கவிதைகளை முதலில் எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்புவார்கள். பின்னாளில் வாய்ப்பு வசதி இருந்தால் நூலாக அச்சிடுவார்கள். இப்போது யூடியூப், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நூலாக்குகிறார்கள். இலக்கியம் கூட நவீனமாகிவிட்டது. ஹிருதயம் மலையாளப் பட பாடல்களைக் கேட்டேன். காதல் உணர்வை உற்சாகமான நம் மனதிற்குள் செலுத்தும் ஹெசம் அப்துல் வகாப்பின் இசை அற்புதம். படத்தின் காட்சிகள் ஏற்படுத்தும் காதல் உணர்வை வேறு உயரத்திற்கு கொண்டு செல்கிறது. 

கடந்த ஞாயிறு சக்திவேல் சாரின் அறைக்குச் சென்றேன். சுலைமானி டீயை அறிமுகப்படுத்தி வைத்தார். நான் தான் அதன் கொதிநிலை தெரியாமல் எடுத்து கையை சுட்டுக்கொண்டேன். துவர்ப்பும், இனிப்பும் கொண்ட வினோத சுவை. அறையில் ஒரு படம் பார்த்துவிட்டு உடனே வந்துவிட்டேன். பல்வேறு திட்டங்களோடு தினசரி நாட்களை செலவு செய்யும் தினகரன் நாளிதழில் பழக்கமான நண்பர்தான் சக்தி. 

சூப்பர் மார்க்கெட் சென்றால் கூட பொருட்களை குறைவாகவே வாங்க வேண்டும். இப்போதைக்கு அதுதான் எனது முடிவு. சமையல் செய்வதில்லை எனவே, அது தொடர்பான செலவு குறைந்துவிட்டது. பொருட்களை வாங்கி தேவையின்றி வீணாக்க வேண்டியதில்லை. 

நன்றி! 

அன்பரசு 


 


 

 



கருத்துகள்