செஞ்சி கோட்டை ஏறிய வரலாற்று நிகழ்ச்சி! - கடிதங்கள்- கதிரவன்

 










6.1.2021

மயிலாப்பூர்

அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா? வானிலை ஆய்வு மையம் அண்மையில் சரியானபடி அறிக்கைகளை வழங்கமுடியாமல் தடுமாறியது. இதற்கான காரணங்கள் என்னவென இந்து தமிழ் திசையில் ஆதி வள்ளியப்பன் எழுதி இருந்தார்.  ஆனந்தவிகடன் நிருபர்களும் இந்த விவகாரத்தை விளக்கி எழுதியிருந்தனர். 

இதை இரண்டு வாரங்களுக்கு முன்னரே அலுவலகத்தின் லெஜண்ட் ஓவியரிடம் பேசினேன். அரசுக்கு நிறைய விதிமுறைகள் உண்டு. தனிநபர்களுக்கு கிடையாது. அரசு நிறுவனங்களுக்கு பொறுப்பு உள்ளது என விரிவாகப் பேசினார். உண்மையில் ரேடார், சென்சார் பழுதாகிவிட்டதே உண்மை. 

ஆ.வியில் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய தமிழ் நெடுஞ்சாலை தொடர் இந்த வாரத்தோடு முடிகிறது. தொடரை முழுவதுமாக படித்துவிட்டேன். ஒடிஷாவில் வேலை செய்யும் தமிழ் தெரிந்த அதிகாரியின் பணி அனுபவங்கள்தான் தொடரின் மையம். தொடர் சிறப்பாக இருந்தது. தொடரில் ஏராளமான நூல்களை பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்தார். இவர் எழுதிய இரண்டாம் சுற்று என்ற நூலை படித்துக்கொண்டு இருக்கிறேன். 

இந்த ஆண்டு உருப்படியாக ஏதேனும் ஒரு நூலை எழுத முயல வேண்டும். எங்கள் நாளிதழ் இனி எப்போது வெளிவரும் என்று உறுதியாக கூறமுடியவில்லை. நன்றி!

அன்பரசு 

-------------------------------------











8.1.2021

மயிலாப்பூர்



அன்பு நண்பர்  கதிரவனுக்கு, வணக்கம். 

நலமா?

இன்று கோபாலபுரம் தபால் அலுவலகத்திற்கு சென்றேன். அஞ்சலட்டை இருப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அடிக்கடி அங்கேயே சென்று வாங்கிக்கொண்டிருந்ததால் கோபத்தில் பொங்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இனி உங்களுக்கு எழுத அட்டைகள் ஏதும் மிச்சமில்லை. இதுவே கடைசி. உங்களுக்கு ஒருவகையில் எனது தொல்லையிலிருந்து நிம்மதி கிடைக்கும். அந்திமழை இதழில் நாவல் ஆசிரியர்கள் கதைக்கருவை எப்படி உருவாக்கினோம் என கருத்துகளை பகிர்ந்திருந்தனர். இதழைப் படிக்க சுவாரசியமாக இருந்தது. 

தேவன் எழுதிய துப்பறியும் சாம்பு நாவலை மெதுவாகவே படித்து வருகிறேன். எழுதவேண்டிய, படிக்கவேண்டிய விஷயங்கள் மனதில் உள்ளன. அவற்றை செயலாக்க மனதில் விருப்பம் குறைவாகவே உள்ளது. இந்த வாரம் திருவண்ணாமலை போக நினைத்தேன். ஆனால் அங்கு தங்குவதற்கான சரியான இடம் இல்லை. அப்படியிருந்தால் நிலைமை கஷ்டம். எனவே, போகும் முடிவை ஒத்தி வைத்தாயிற்று. அடுத்தவாரம் பொங்கல் விழாவுக்கான கூட்டம் பஸ்சில் கூடிவிடும் என்பதால் அப்போதும் போவது கஷ்டம். ஞாயிறு முழு ஊரடங்கு. இனி இது இப்படியே தொடரும். மனநலன் பிரச்னைகளை குறைபாடுகளை கொரோனா அதிகரிக்கும் என நினைக்கிறேன். 

கணினியில் அழிந்துபோன கோப்பை மீண்டும் எழுதவேண்டும். புதிதாக நூல்களைப் படித்துத் தான் எழுத வேண்டும். உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

அன்பரசு

------------------------------------------












13.1.2021

மயிலாப்பூர்




அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா? நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன். இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர்  அறைக்கு வந்தேன். குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கே சங்கடம் அளித்தது. வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை. இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும். 

திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன்.  தஞ்சையைச் சேர்ந்தவர். புகைப்படக்காரர்தான்  அவரும்.  முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார். ஓவியம், புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். அதுதான் பிழைப்பும் கூட. இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம். அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள். சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான். அதைக்கடந்துதான் வரலாறு, வெங்காயம் எல்லாம். டிக்கெட் வாங்குவது எல்லாமே க்யூஆர் கோட் மூலம்தான். தரையில் கற்பாளங்கள், சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதான் இத்தனை ஆண்டுகளாகியும் தாக்குப்பிடிப்பதன் ரகசியம். பெரிய கலைப்பொக்கிஷம் என்றெல்லாம் கூறிவிட முடியாது. 

மலையில் ஏறி இறங்க உடலில் தெம்பு வேண்டும். இல்லாவிட்டால் கல் மண்டபத்தில் சாய்ந்து உட்காரவேண்டியதுதான். ஆலிவர் இடையில் சோர்ந்தாலும் நான் அவரை ஊக்கமூட்டி மேலே கூட்டிச் சென்றேன். ராணி கோட்டை ராஜா கோட்டை என இரண்டுமே சிதிலமடைந்தவைதான். குப்பைகள் சேர்ந்து மோசமான நிலையில்தான் இருக்கின்றன. நிதானமாக பார்க்க ஒரு நாள் போதாது என்பதே உண்மை. நன்றி!

அன்பரசு 

Pinterest

  

கருத்துகள்