படுகொலையை நினைவுபடுத்தும் விளம்பரம்







ஜெர்மன் கேமரா கம்பெனி லெய்கா புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளது. அண்மையில் வெளியிட்ட விளம்பரத்தில் சீனாவின் தியான்மென் சதுக்க வன்முறைக்காட்சியை கேமராவில் படம்பிடிப்பது போல விளம்பரத்தை உருவாக்கி வெளியிட்டது. ஜூன் 4 வரை சீனாவில் தியான்மன் சதுக்க படுகொலைகளைப் பற்றிய செய்தியை யாரும் பார்க்க முடியாதபடி தடுப்பது கம்யூனிச அரசின் வழக்கம்.


லெய்காவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தையொட்டி உருவான விளம்பரம் இது. ஹன்ட் என்ற பெயரில் உலகம் முழுக்க நடந்த வன்முறை நிகழ்வுகளை புகைப்படக்காரர்கள் போட்டோ எடுத்திருந்தனர். அதில் 1989 ஆம் ஆண்டு ஜூன் 4 அன்று தியான்மன் சதுக்க படுகொலைகள் புகைப்படமும் ஒன்று. இதில் போராடிய மாணவர்களை ஒடுக்க சாலைகளில் டாங்குகள் செல்கின்றன. இந்த விளம்பரம் பிரேசிலில் அண்மையில் வெளியானது.



விளம்பரப்படத்தை நாஸ்கா - சாச்சி அண்ட் சாட்சி என்ற நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த விளம்பரம் வெளியானதும், சீனர்கள் தேசியவாதத்தில் குதித்தனர். இது சீனாவுக்கு பெரிய அவமானம். ஹூவெய் போன் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்ட லெய்கா கேமரா நிறுவனம் இப்படி செய்யலாமா எனவும் பல கருத்துகள் இணையத்தில் குவியத் தொடங்கின.


சீனாவில் பல்வேறு வீடியோ இணையதளங்களில் பரவிய இந்த விளம்பரத்தை டெக் வல்லுநர்கள் அரசின் உதவியுடன் அகற்றினர். சீனாவில் இந்த விளம்பரத்தை லெய்கா நிறுவனம் வெளியிடவில்லை. சீனாவுக்கு வெளியில் இந்த விளம்பரம் வைரலாகி வருகிறது. சில சீனர்கள் விபிஎன் மூலம் அரசுக்கு டிமிக்கி கொடுத்து விளம்பரத்தை பிறருக்கு பரப்பி வருகிறார்கள். வெய்போ நிறுவனத்திலுள்ள லெய்கா கணக்கிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதும் இல்லை.


-குளோபல் வாய்சஸ்