புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

finger licking good -Meat


இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை.

இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது?

அவகாடோ, தேங்காய், பருப்பு வகைகள், சோயா பால், பட்டாணிகள், பீன்ஸ் வகைகள், பாதாம் பால் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதில் நாம் புரத பவுடர்களை சேர்க்கவில்லை. அவற்றில் சர்க்கரை, எம்எஸ்ஜி சேர்ப்பதால் உடலுக்கு கேடு விளைவிக்கிறது.

ஒவ்வாமையைப் பொறுத்தவரை உருளைக்கிழங்கு, பளீர் வெள்ளை அரிசி, ரின் வெண்மையில் உள்ள மைதா, பாமாயில் ஆகியவை ஆபத்தானவை. இவற்றை முடிந்தளவு உணவுத் திட்டத்தில்  நுழையவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றை வைத்து செய்த சாக்லெட், கேக்குகள், வெளிநாட்டு சாக்லெட்டுகள் என சாப்பிட்டாலும் ஆபத்துதான்.

பழுப்பு அரிசி, தானியங்கள் சேர்ந்த பிரெட், கருப்பு அரிசி, பழுப்பு பாஸ்மதி அரிசி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றை சாப்பிடலாம். இதற்கு மாறாக சாப்பிடக்கூடாது என்றுள்ள உணவுகளும் உள்ளது. அதையும் பார்ப்போம்.

வெள்ளை, கோதுமை பிரெட், செமோலினா பாஸ்தா, வெள்ளை கோதுமை பாஸ்தா, வெள்ளை, மஞ்சள், சிவப்பு உருளைக்கிழங்கு எதையும் சாப்பிடக்கூடாது. இப்போது தானியங்கள் சிவற்றைப் பார்ப்போம்.

பார்லி

இதனை நாம் மதிய உணவு அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலேயே சாப்பிட்டதுதான். பார்லி கஞ்சி என்றால் பலருக்கும் நினைவுக்கு வந்துவிடும். இது நார்ச்சத்து மிக்கது. எனவே, செரிமானம் ஆக நேரம் எடுக்கும். இதில் குளூட்டேன் உள்ளது. எனவே, குளூட்டேன் ஒவ்வாமை இருந்தால் தவிர்ப்பது நல்லது.

பழுப்பு அரிசி

பாலீஷ் செய்யாத அரிசி. எனவே வைட்டமின் இ சத்து உள்ளது. இதுதான்,தோல், நோய் எதிர்ப்புசக்தி ஆகியவற்றுக்கு முக்கியமானது. வெள்ளை அரிசியை விட இதில் நார்ச்சத்து அதிகம். டிரைப்டோபான் எனும் வேதிப்பொருள் உள்ளது. ஒருவரின் தூக்கத்திற்கு உதவும் பொருள் இது. பழுப்பு அரிசியை முதலில் சாப்பிட கஷ்டமாக இருந்தாலும், சமைத்து சாப்பிட பழகினால் எளிதாக பழகிவிடும்.

ஓட்ஸ்

இதனை சூப்பர் மார்க்கெட், ஹைப்பர் மார்க்கெட்டுகளில் இன்ஸ்டன், சாதாரண ஓட்ஸ் என வாங்கலாம். இதில் சஃபோலா மசாலா ஓட்ஸ் தென்பட்டால் அதை வாங்காதீர்கள். இதில் எம்எஸ்ஜியை  சாமர்த்தியமாக சேர்த்து அதற்கு ஹைட்ரோலைஸ்டு வெஜிடேரியன் புரோட்டீன் என பெயரிட்டிருக்கிறார்கள். குவாக்கரில் சீசன் மிக்ஸ் என்ற பெயரில் விற்கிறார்கள். இதில் என்ன பகுதிப்பொருள் உள்ளதோ என்று தெரியவில்லை. முடிந்தளவு ஓட்ஸை பதப்படுத்தாத தன்மையில் வாங்குவது நல்லது. இது கோதுமைக்கு சரியான மாற்று. இன்று நிறைய பிஸ்கெட்டுகளை  ஓட்ஸை வைத்து செய்கிறார்கள். சாப்பிடும்போது சிலசமயம் மாட்டுக்கு வைக்கும் புண்ணாக்கை வாய் வைத்துவிட்டோமா என்று கூட தோன்றும். ஆனாலும் ஓட்ஸ் அல்லவா? இந்தியாவில் தரமான பால் வணிக நிறுவனமான அமுல் கூட ஓட்ஸ் பிஸ்கெட்டை போட்டிருக்கிறார்கள். எனவே, ஓட்ஸ் சாப்பிடுவதில் பழுதில்லை. அதனை எப்படி என்ன மாதிரியான தரத்தில் வாங்கி சாப்பிடுகிறோம் என்பதே முக்கியம்.

கொழுப்பு

இடுப்பில் இருபுறமும் அஸ்லாம் பாய் கறிக்கடை ஆடு போல தொங்குவது ஊளைச்சதை வந்தபிறகுதான் புஷ்அப்பா, புல் அப்பா என பலரும் யோசிப்போம். கொழுப்பு அந்த மாதிரி அல்ல. உடல் உழைப்பு செய்ய உடலுக்கு கொழுப்பு அவசியம். அதனை கட்டுப்பாடாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி முக்கியம்.

இன்று சந்தையில் கிடைக்கும் சமையல் எண்ணெய்களில் கலப்படம் இல்லாமல் ஏதுமே இல்லை. அனைத்து எண்ணெய்களிலும் பாமாயில் கலந்துள்ளது. இதனை பிளெண்ட்ட்  என நுட்பமாக சிறிதாக போட்டிருப்பார்கள்.  சூரியகாந்தி எண்ணெய், பாமாயில், சோள எண்ணெய், அரிசி தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவை எப்போதும் அதிகம் விற்கும் எண்ணெய்கள். இதனை விலை உயர்வை கட்டுப்படுத்தவே பிளெண்டட் என்ற வகை உருவானது. இது உடல்நலனை கெடுக்க கூடிய முறை. கலந்துள்ள இரு எண்ணெய்களும் வெவ்வேறு கொதிநிலை கொண்டவை. அவற்றை பயன்படுத்தும்போது உடலே கடலை எண்ணெய்யா, கடுகு எண்ணெய்யா என குழம்பித் தவிக்கும்.

சுழற்சி முறையில் எண்ணெய்களை பயன்படுத்தினாலும் கலப்பு எண்ணெய்களையும், சுத்தமான பாமாயிலையும் தவிர்ப்பது உடல்நலனுக்கு நல்லது.

என்ன சாப்பிடலாம்?

பீட்ரூட், பெர்ரி, செர்ரி, திராட்சை ஆகியவற்றை சாப்பிடலாம். இவற்றில் ஆந்தோசயான் என்ற வேதிப்பொருள் உண்டு. இவை ஒவ்வாமைக்கு எதிரானவை.

ஒவ்வாமை இருப்பவர்கள் பால் பொருட்களில் தயாரிக்கும் உணவு வகைகளை தவிர பிற வகைகளுக்கு மஞ்சள் தூளை பயன்படுத்தலாம். இதன்மூலம், ஒவ்வாமை பாதிப்பு தரும் சமாச்சாரங்களை அமைதிபடுத்த முடியும்.

அதிகளவு உரங்கள் இல்லாமல் பயிரிடப்பட்ட காய்கறிகளை வாங்கி சாப்பிட முயலுங்கள். சாப்பிடும் காய்கறிகள் அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி என பல நாட்டு கொடிகளை கொண்டிருப்பது பெருமையாக வேண்டுமானால் இருக்கலாம். உடலுக்கு அதெல்லாம் தெரியாது. அதற்கு உணவு தேவை. முடிந்தளவு பத்து கி.மீ. க்குள் உணவு விளைந்திருந்தால் பெரும்பகுதி சத்துகள் வீணாகாது.

போக்குவரத்தினால் கொஞ்சம் அழுக்கானாலும் சத்தில் மோசம் கிடையாது. உள்ளூர் பொருளாதாரமும் மேம்படும். இதற்கான ஒன்றிய அரசு போல ஸ்லோகன் சொல்லி அதை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியதில்லை. நமது செயல்கள் நேர்மையாக இருந்தால் அதனை யாரிடமும் மெய்ப்பிக்க வேண்டாம் என வினோபா பாவே சொல்லியிருக்கிறார். உங்களது வாழ்க்கை மற்றவர்களுக்கு முட்டாள்தனமாக தோன்றலாம். அதைப்பற்றி நாம் கவலைப்பட அவசியமில்லை.

pinterest












 

கருத்துகள்