விஸ்வரூப விளையாட்டுகளில் கொட்டும் பணம்!
விஸ்வரூபம் எடுக்கும் விளையாட்டு!
/cdn.vox-cdn.com/uploads/chorus_image/image/59292793/pubg.0.jpg)
“நாள்பூரா கம்ப்யூட்டரையே பார்த்துக்கிட்டிருக்கியே?
அதில் என்னதான் இருக்கோ?” என குடும்பமே எரிச்சலாக பேசிக்கொண்டிருந்தாலும் நியூஜென்
இளசுகள் எதையும் கண்டுகொள்ளாமல் வைஃபையில் டீமாக இணைந்து சாகச த்ரில்லுடன் பப்ஜி விளையாடுவதை
இனிமேலும் நிறுத்தப்போவதில்லை.
கம்ப்யூட்டர்களில் மட்டுமே விளையாடும்
வசதி இன்று டேப்லட்டிற்கு நகர்ந்து மெல்ல பட்ஜெட் போன்களிலும் கூட விளையாடலாம் என்றளவிற்கு
ஜனரஞ்சகமாகியுள்ளது. இரண்டாவது பெரிய ஸ்மார்ட்போன் மார்க்கெட்டான இந்தியாவை கச்சிதமாக
மோப்பம் பிடித்த சீன நிறுவனங்களான டென்சென்ட், அலிபாபா, யூஸூ ஆகியவை இந்தியா மொபைல்விளையாட்டுகளில்
முதலீடுகளை கொட்டத்தொடங்கியுள்ள நிலையில் இந்திய
கணினி மற்றும் ஸ்மார்ட்போன் விளையாட்டுத்துறை ராட்சஷ வளர்ச்சி காட்ட முக்கியக்காரணம்.
தற்போது ரூ.90 கோடி முதலீட்டில்
வளர்ந்துவரும் இந்திய விளையாட்டுத்துறை 2020 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டாலர்களை முதலீடாக
பெறும் என மார்க்கெட் வல்லுநர்கள் கணித்துள்ளனர். இந்தியாவில் மாட்டுவண்டியாக இருந்த
இணைய வேகம் தற்போது குதிரைப்பாய்ச்சலாக மாறி உலகளவிலான விளையாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை
ஈர்க்கத் தொடங்கியுள்ளது. கம்ப்யூட்டரில் விளையாடுவதை விட வெளியில் சென்று விளையாடுவது
நல்லது என்று கூறினாலும் அதற்கு மைதானங்கள் தேவை அல்லவா?
நகரின் வேறுபகுதியிலுள்ள நண்பர்களுக்கும்
கூட வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி வைஃபையில் ஸ்மார்ட்போன்களை இணைத்தால் போதும். ஜாலியாக,
குழுவாக இணைந்து இணைய மையத்திலிருந்து விளையாடி எதிரிகளை கொன்றுகுவித்து கொண்டாடலாம்.
இன்று இணையத்தில் ப்ரௌசிங் செய்பவர்களை விட கேம் விளையாடுபவர்கள் மூலமாகத்தான் இணைய
சென்டர்கள் கொஞ்சமேனும் காசு பார்க்கின்றன. பல்வேறு நகரங்களிலுள்ள ஷாப்பிங் மால்களிலும்(சென்னை
ஆர்க்நெமிசிஸ்- இஸ்பஹானி சென்டர்) விஆர், ஏஆர் என கணினி விளையாட்டுகளின் அப்டேட் மிரட்டுகிறது.
ஆசுஸ், கார்செய்ர், என்விடியா, சோனி உள்ளிட்ட நிறுவனங்களும் சிறுவர்களை தங்கள் வாடிக்கையாளர்களாக்க
இந்த ஸ்பாட்களை கச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றன.
“சாதாரண விளையாட்டுகளிலிருந்து
திகில், சாகசம், மூளையை பிழியும் கான்செப்ட் விளையாட்டுக்கள், செயற்கை நுண்ணறிவு விளையாட்டுகள்
என அளவில்லாத கிரியேட்டிவிட்டி கொட்டிக்கிடக்கும் துறையாக கணினி மற்றும் மொபைல் விளையாட்டுத்துறை
மாறிவருகிறது” என்கிறார் கம்ப்யூட்டர் விளையாட்டுத்துறை வல்லுநர் ஒருவர். 2016 ஆம்
ஆண்டு உலகமெங்கும் 104.8 பில்லியன் டாலர்களை சம்பாதித்து தந்த கம்ப்யூட்டர் விளையாட்டுத்துறை,
2021 ஆம் ஆண்டு 151.7 பில்லியன் டாலர்களாக உயரும் என ஃப்ரோஸ்ட் அண்ட் சுலிவன் ஆராய்ச்சி
நிறுவன அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. விளையாடுவதோடு கருத்தாக விளையாட்டுத்துறையை புரிந்துகொண்டால்
99கேம்ஸ், கேமிங்மங்க் உள்ளிட்ட வளர்ந்து வரும் இந்திய நிறுவனங்களில் கேம் டிசைனராகவும்
பணிபுரிய சிறப்பான வாய்ப்புகள் அநேகம் உண்டு.
–- ச.அன்பரசு
நன்றி: டெக்கன் கிரானிக்கள்